100 ரூபாய்க்காக ஒரு கொலை...!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரூ.100க்காக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் பேரனை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள எட்மாதவ்லா கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு(40). கூலித் தொழிலாளி. அவர் தான் பார்த்த வேலைக்கு கூலி அளிக்குமாறு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் எம்.எல். உபத்யாயவின் பேரன் ஜெய் க்ரிஷனிடம் கேட்டுள்ளார். ஜெய் பப்புவுக்கு அளிக்க வேண்டிய கூலித் தொகை ரூ.100 ஆகும்.
ஜெய்யோ பப்புவுக்கு உரிய கூலியை அளிக்காமல் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் பப்புவை கீழே தள்ளி அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து ஜெய் கிடைக்காததால் அவரது தாத்தாவை தாக்கினர். மேலும் அவரின் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.
ஊர் மக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த உபத்யாய சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய் க்ரிஷனை தேடி வருகிறார்கள்.
ஊர் மக்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.