எப்பவுமே பிசியாக இருக்கும் ஜிஎஸ்டி உதவி எண்...இதுக்குப் பேர் தான் ஹெல்ப் லைனா?
ஜிஎஸ்டி மசோதா குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட உதவி எண் எப்போதுமே பிசியாக இருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட உதவி எண்ணால் எந்தப் பயனும் இல்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் ஒரே வரியை அமல்படுத்தும் திட்டம் சரக்கு மற்றும் சேவை வரி "ஜிஎஸ்டி" ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த வரி முறையில் இணைய வணிகர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து ஜிஎஸ்டி எண் பெற அந்தந்த மாநில வணிகவரித்துறை சார்பில் பிரத்யேக இணையதளங்களும் அமைக்கப்பட்டன. மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாநிலங்கள் உதவி எண்களையும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சிறு தொழில் வியாபாரி ஒருவர் தான் இதுவரை ஜிஎஸ்டியில் இணையாததால் அது குறித்த தகவலைத் தெரிந்து கொள்ள கடந்த 4 நாட்களாக ஜிஎஸ்டி சுவீதா கேந்திரா உதவி எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் போதும் லைன் பிசியாக உள்ளது சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள் என்றே பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது என்று கூறியுள்ளார்.
சிறு வணிகர்கள் பாதிப்பு
ஜிஎஸ்டி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும், வணிகர்களுக்கு நலன் பயக்கும் என்று சொல்லப்படுவதெல்லாம் சரியான விஷயம் தான். ஆனால் இவர் போன்று கணிணி அறிவு, படிப்பறிவு இல்லாதவர்கள் நிலை என்ன என்பது தான் தற்போதைய கேள்வி. சார்டர்ட் அக்கவுண்டன்டை ஒருவரை தொடர்பு கொண்டும் அந்த வணிகர் இது குறித்த கேட்ட போது சில நாட்கள் பொருத்திருக்குமாறு பதில் கூறியுள்ளார் அவர்.
தெளிவு இல்லை
எல்லா சிறு வணிகர்களிடமும் கணிணி இருப்பதில்லை அவர்கள், சார்டர்ட் அக்கவுண்டன்டின் உதவியுடனே வாட் வரி அல்லது கலால் வரியை இது வரை செலுத்தி வருகின்றனர். முழு நேரமாக கணக்கு தணிக்கையாளரை வைத்துக் கொள்ள முடியாதவர்கள் ஜிஎஸ்டியின் புதிய விதிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களில் அரசு அக்கறை காட்டவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் வணிகர்கள்
வீடியோ விழிப்புணர்வு
வணிகர்களுக்கு இருக்கும் ஐயங்களை போக்க பயனுள்ள வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தனியார் இணையதளங்களும், செயலிகளும் இந்த சேவையை வழங்குகின்றன, ஆனால் அதற்காக அவை கட்டணங்களை வசூலிக்கின்றன.
தகவல் போதுமானதாக இல்லை
இதே போன்று நாடு முழுவதும் தொழில்துறையினரால் பல்வேறு கருத்தரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஜிஎஸ்டி நிறைவேற நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில், இவை போதுமானதாக இல்லை என்பதே சிறு வியாபாரிகளின் எண்ணமாக உள்ளது.