ஊழல் செய்யும் அளவுக்கு எங்கள் தொகுதிக்கு இதுவரை நிதி ஒதுக்கியதில்லை- லடாக் எம்பி கிண்டல்
லடாக்: ஊழல் செய்யும் அளவுக்கு எங்கள் தொகுதிக்கு இதுவரை நிதி ஒதுக்கியதில்லை என லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் தெரிவித்தார்.
குஜராத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில் லடாக்கை சேர்ந்தவர்கள் மிகவும் நம்பகமானவர்கள். அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள்.
ஊழல் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு இதுவரை எந்த பணமும் கொடுக்கப்படவில்லை. 370ஆவதுசட்டப்பிரிவை நீக்கிய பிறகு புதிய யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ள லடாக்கின் வளர்ச்சிக்காக, ரூ 6000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அதை கையாள்வது கூட எங்களுக்கு ஒரு சிக்கலாக இருக்கும் என நகைச்சுவையாக தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
அப்போது எம்பி செரிங் மக்களவையில் பேசி ஒரே நாளில் பிரபலம் ஆனார். அவர் பேசுகையில் நான் பிறந்து வளர்ந்தெல்லாம் லடாக்கில்தான். அப்போதிலிருந்து இன்று வரை மாற்றமும் முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. அதற்கு காரணம் 370 சட்டப்பிரிவு ஆகும் என தெரிவித்திருந்தார்.