திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிபாரிசு லட்டு, வடை விலை உயர்வு
திருமலை ஏழுமலையான் கோவிலில் சிபாரிசு கடிதங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டின் விலை உயர்த்தப்பட்டது.
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் மூலம் கூடுதலாக வாங்கப்படும் லட்டு,வடை பிரசாத விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள், தரிசன டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் பிரசாத விலையில் எந்த மாற்றமும் இல்லை.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. அதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு,தனியார் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் லட்டு, வடை ஆகியவற்றின் விலையைத் தேவஸ்தானம் இருமடங்காக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டு
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதம், 3 வகைகளாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவ லட்டு, சாதாரண லட்டு, சிறிய லட்டு என 3 வகைகளாக இந்த லட்டுப் பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சிபாரிசு கடிதம்
இதில் தரிசனம் செய்த பக்தர்களுக்கு சிறிய லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. சாதாரண லட்டு 25 ரூபாய்க்கும், கல்யாண உற்சவ லட்டு 100 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. விஐபிகளிடம் இருந்து சிபாரிசுக் கடிதங்கள் பெற்று தரிசனத்திற்கு வருபவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் லட்டு, வடைகளின் விலையை தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.
லட்டு,வடை பிரசாதம்
அதன்படி, 25 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சாதாரண லட்டு 50 ரூபாய்க்கும், 25ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்ட வடை 100 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கல்யாண உற்சவ லட்டு 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடிதம் வேண்டாம்
இந்த திடீர் விலையேற்றத்தால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விலையேற்றத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் லட்டுக்காக சிபாரிசு கடிதம் பெற்று வர வேண்டாம். நேரிடையாக வந்து யார் எவ்வளவு லட்டுகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதிரடி விலை அதிகரிப்பு
தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு திருப்பதி லட்டு, வடை பிரசாதங்கள் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ரூ.25க்கான ஒரு லட்டை, 200க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.50 ஆகவும், ரூ.100க்கு விற்பனை செய்யும் கல்யாண உற்சவ லட்டை, 10க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.200 ஆகவும், ரூ.25க்கு விற்கப்படும் வடையை 10க்கு மேல் வாங்கினால் ஒரு வடை ரூ.100 ஆகவும், ரூ.3.50க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.7 ஆகவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும், தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.