23 வருட சிறை தண்டனை.. செய்யாத தவறுக்காக ஜோடிக்கப்பட்ட 5 இஸ்லாமிய இளைஞர்கள்.. நடுங்க வைக்கும் கதை!
செய்யாத குற்றத்திற்காக 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் ராஜஸ்தான் ஹைகோர்ட் மூலம் நேற்று முதல்நாள் விடுவிக்கப்பட்டனர்.
ஜெய்ப்பூர்: செய்யாத குற்றத்திற்காக 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் ராஜஸ்தான் ஹைகோர்ட் மூலம் நேற்று முதல்நாள் விடுவிக்கப்பட்டனர்.
1990ல் அமெரிக்காவில் உள்ள சென்டரல் பார்க் என்ற இடத்தில் நடந்த பெண் பாலியல் கொலை வழக்கு ஒன்று உலகம் முழுக்க பிரபலம். இந்த வழக்கில் தவறு செய்யாத ''5 கறுப்பின சிறுவர்கள்'' கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் என்று ஜோடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
10-12 வருடங்களுக்கு பின் இவர்கள் குற்றமே செய்யவில்லை என்று நிரூபணம் ஆகும். உண்மையான குற்றவாளி கைது செய்யப்படுவான். ஆனால் இவர்கள் 5 பேரும் தொலைத்த அந்த இளம் வயது அதன்பின் மீண்டு வரவே இல்லை. அப்படி ஒரு சென்டரல் பார்க் சம்பவம்தான் ராஜஸ்தானில் நடந்து இருக்கிறது.
என்ன நடந்தது
1996 மே 21ம் தேதி டெல்லியில் உள்ள லாஜ்பத் நகர் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. காஷ்மீர் இஸ்லாமிக் முன்னணி அமைப்பு மூலம் நடந்த இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ஹமீத் என்ற தீவிரவாதி உடனடியாக கைதும் செய்யப்பட்டான். இதுவரை எல்லாம் சம்பவங்களும் விதிப்படிதான் நடந்தது.
ஆனால் என்ன
ஆனால் அதன்பின்தான் விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கில் தவறு செய்ய தொடங்கினார்கள். இந்த வழக்கில் ஸ்ரீநகரை சேர்ந்த லத்தீப் அஹமது வாசா, மிர்ஸா நிஸார் ஹுசைன், அப்துல் கோணி, ரயீஸ் பெக் மற்றும் அலி முகமது பாட் என்று ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். தீவிரவாதி அப்துல் ஹமீத்துக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
எந்த வருடம்
இவர்கள் ஐந்து பேரும் 1996ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அதன்பின் இவர்கள் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல மொத்தம் 23 வருடம் இவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்ட இவர்கள் என்ஐஏ, சிபிஐ தொடங்கி ரா வரை பல்வேறு அமைப்புகளால் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். மிக மிக மோசமாக துன்புறுத்தப்பட்டார்கள்.
என்ன வழக்கு
தீவிரவாத சதித்திட்டம் தீட்டியது, ஆயுதங்களை பதுக்கியது, கொலை குற்றம், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது என்று பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது பதியப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரிவுகள் எல்லாம் மிக முக்கியமானது என்பதால் இவர்கள் எல்லோரும் தனி செல்லில் அடைக்கப்பட்டார்கள். அதேபோல் இவர்களுக்கு கடந்த 23 வருடமாக பரோல் கிடையாது.
பார்க்கவில்லை
கடந்த 23 வருடமாக இவர்கள் பரோலில், ஜாமீனில் வெளியே வரவில்லை. இன்னும் விசித்திரம் என்னவென்றால் குடும்பத்தை கூட பார்க்க லத்தீப் அஹமது வாசா, மிர்ஸா நிஸார் ஹுசைன் மற்றும் அலி முகமது பாட் உட்பட ஐந்து பேருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 23 வருடம் இவர்கள் தனி அறையில் சிறையில் வாழ்க்கையை கழித்தார்கள்.
மிக மோசம்
இதில் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம் அப்துல் கோணி கைது செய்யப்பட்ட போது படித்துக் கொண்டு இருந்தார். ரயீஸ் பெக் பள்ளியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இதில் முக்கியமாக போலீஸாரால் ரயீஸ் பெக் மிக மோசமாக சித்திரவதைகளுக்கு உள்ளானார். இவர் 23 வருடமும் தனி சிறையில்தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடியவில்லை
ஆனால் உண்மை எப்படியாவது வெளியே வரும் என்று கூறுவார்களே.. அப்படித்தான் இவர்கள் வழக்கிலும் உண்மை வெளியே வந்தது. மிக தாமதமாக 23 வருடங்கள் கழித்து உண்மை வெளியே வந்தது. இவர்கள் மீது புகார்களை ஜோடிக்க எவ்வளவோ கஷ்டப்பட்டு கூட விசாரணை அதிகாரிகளால் முடியவில்லை. இவர்களுக்கும், இந்த குற்றத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க ஒரு சின்ன ஆதாரம் கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை.
வழக்கு நடந்தது
ராஜஸ்தான் ஹைகோர்ட்டிலும், அதற்கு முன் டெல்லி கோர்ட்டிலும் வழக்கு நடந்தும் கூட, இவர்களுக்கு எதிராக ஒரு ஆதாரத்தை கூட விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்க முடியவில்லை. ஏன் கேவலம் அப்துல் ஹமீத் தீவிரவாதிக்கும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் கூட அதிகாரிகளால் நிரூபிக்க முடியவில்லை. அப்துல் ஹமீத் தீவிரவாதிக்கு மட்டும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.
இல்லை
இந்த நிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி இந்த வழக்கை ராஜஸ்தான் ஹைகோர்ட் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. இவர்களுக்கு எதிராக ஒரு நம்ப கூடிய ஆதாரங்களை கூட அதிகாரிகள் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி, நீதிபதிகள் விசாரணை அதிகாரிகளைக் கண்டித்து உள்ளனர்.
மிக மோசம்
இதில் விசித்திரம் என்னவென்றால் லத்தீப் அஹமது வாசா, மிர்ஸா நிஸார் ஹுசைன், அப்துல் கோணி, ரயீஸ் பெக் மற்றும் அலி முகமது பாட் ஆகியோர் ஒருவரை ஒருவர் இதற்கு முன் பார்த்தது கூட கிடையாது . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போதுதான் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்கிறார்கள். தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள சென்டரல் பார்க் வழக்கு குறித்து குறிப்பிட்டோமே.. அதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இப்படித்தான் அதற்கு முன் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள்!
எல்லோரும் விடுதலை
கடந்த செவ்வாய் கிழமை மாலை 5.19 மணிக்கு இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆம் 23 வருடங்கள் கழித்து இளமை போய், வேலை இன்றி, படிப்பு இன்றி, மனைவி குழந்தைகள் இன்றி, எல்லாம் முடிந்து இவர்கள் நிர்கதியாக தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கிறார்கள். செய்யாத குற்றத்திற்காக இவர்கள் 23 வருடம் சிறையில் காலம் தள்ளி கொடுமைகளை அனுபவித்து உள்ளனர்.
என்ன வயது
20+ வயதில் சிறைக்கு சென்றவர்களுக்கு இப்போது என்ன வயது ஆகிறது என்று கேட்டால் அதிர்ந்து போவீர்கள். லத்தீப் அஹமது வாசாக்கு 42, மிர்ஸா நிஸார் ஹுசனுக்கு 39, அப்துல் கோணிக்கு 57, ரயீஸ் பெக்க்கு 56 மற்றும் அலி முகமது பாட்க்கு 48 வயதாகிறது. ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு இவர்களின் குடும்பத்தையே சிதைத்து இருக்கிறது.
என்ன கோபம்
நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்று கூட எங்களுக்கு தொடக்கத்தில் தெரியாது.. எங்களை மோசமாக கொடுமை படுத்தினார்கள். போக போக எங்களுக்கு இதுதான் வாழ்க்கை என்று கூட பழகிவிட்டது. அங்கு ஒரு வாரம் இருக்க முடியுமா என்று நினைத்தோம்.. 23 வருடங்கள் தாண்டிவிட்டது என்று 5 அப்பாவிகளும் வருத்தமாக தெரிவித்து உள்ளனர்.
என்ன மரணம்
அதிலும் முகமது அலி பாட்டின் அப்பா இவர் கைதான அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். 1996 ல் கோர்ட்டில் இவரை பார்த்த அப்பா ஷேர் லி பாட் வீட்டிற்கு சென்று அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். மீதம் இருக்கும் உறவினர்களை இவரால் பார்த்து அடையாளம் கூட காண முடியவில்லை. இப்படி மீதம் உள்ள 4 பேருக்கும் குடும்பமே நிலை குலைந்துதான் போய் உள்ளது.
ஒரே காரணம்
அமெரிக்காவில் விடுதலை ஆன அந்த ஐந்து கறுப்பின இளைஞர்களுக்கும் அதன்பின் லட்சக்கணக்கில் பணம் இழப்பீடாக வழங்கப்பட்டு பணியும் வழங்கப்பட்டது.. ஆனால் இவர்களுக்கு அப்படி ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை. அமெரிக்காவில் 1990ல் 5 கருப்பின் இளைஞர்களின் வாழ்க்கை பறிபோனதற்கும்.. இந்தியாவில் 1996ல் மூன்று இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை பறிபோனதற்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது... அவர்கள் சிறுபான்மையினர்!