லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் கொலை தான்... நோதாஜியைத் தொடர்ந்து உறவினர்கள் கிளப்பும் சர்ச்சை
டெல்லி : முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடுபத்தினர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி தமது தந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தொடர்வதாக கூறினார்.
தாஷ்கண்டில் அவர் கடைசியாக தங்கியிருந்த ஓட்டல் அரங்கில் அவசர உதவிக்கான எந்த ஏற்பாடுகளும் செய்து தரப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். தனது தந்தையின் மரணம் கொலை தான் என தமது தாயார் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தார்.
எனவே லால் பகதூர் சாஸ்திரியின் தாஷ்கண்ட் பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என அனில் சாஸ்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
1966-ல் ரஷ்யாவில் ஒரு பகுதியாக இருந்த தாஷ்கண்டில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தான் தங்கியிருந்த ஓட்டல் அரங்கில் நள்ளிரவில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லால் பகதூர் சாஸ்திரி கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வளவு காலத்திற்கு பிறகு அனில் சாஸ்திரி குற்றச்சாட்டை வைப்பது ஏன் என காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.