எங்க.. எனக்கு எதிராக "ரெட் கார்னர்" நோட்டீஸ் விட்டு பாருங்க... சி.பி.ஐ.க்கு லலித் மோடி சவால்
டெல்லி: தமக்கு எதிராக சி.பி.ஐயால் இண்டர்போல் மூலம் "ரெட்கார்னர் நோட்டீஸ்" விடமுடியுமா? என்று இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் தலைமறைவு குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி சவால்விட்டுள்ளார்.
ஐ.பி.எல். நிதி மோசடி வழக்குகளை எதிர்கொள்ளாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கிறார் லலித் மோடி. இங்கிலாந்தில் இருந்து கொண்டு இந்திய அரசியலில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணகர்த்தாவாகவும் இருந்து வருகிறார் லலித் மோடி.
லலித் மோடிக்கு சட்டவிதிகளை மீறி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் உதவி செய்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனிடையே சர்வதேச போலீசான இண்டர்போல் மூலம் லலித் மோடியை கைது செய்வதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவது குறித்து சி.பி.ஐ.க்கு அமலாக்கப் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு லலித் மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இண்டர்போல் அமைப்பிடமிருந்து கிடைத்த தகவலின்படி எனது வாதங்களைக் கேட்டறியாமல் எனக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட முடியாது என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ளதைப் போல அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிரிட்டனில் சுலபமாக அறிவிக்கை வெளியிட முடியாது. எனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை முடிந்தால் சி.பி.ஐ. வெளியிடட்டுமே...
எனது விவகாரத்தில் அமலாக்கத் துறை ஏன் உரிய முறைகளை பின்பற்றவோ, அழைப்பாணைகளை அனுப்பவோ இல்லை? இதுவரை எந்த அழைப்பாணையும் எனக்கு வந்துசேரவில்லை.
என்னை முன்னிறுத்தி இந்திய நாடாளுமன்றம் முடக்கப்படுவதில் அரசியலைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, என்னைப் பற்றி கவலைப்படாமல், அவரது சகோதரியின் கணவர் ராபர்ட் வதேராவைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும்.
சுஷ்மா ஸ்வராஜுடன் பணப் பரிவர்த்தனைகள் எதையும் நான் மேற்கொள்ளவில்லை. இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
இவ்வாறு லலித் மோடி கூறினார்.