'சர்ச்சைகள் ஓய்வதில்லை'.. சுஷ்மா கணவருக்கு கம்பெனியின் இயக்குநர் பதவி தர முன்வந்த லலித் மோடி!!
டெல்லி: லலித் மோடி குடும்பத்துக்குச் சொந்தமான இந்தோஃபில் ரசாயன நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுசலை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் பெருமளவு நிதி முறைகேடு செய்த அதன் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவை விட்டு தப்பி ஓடி லண்டனில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவர் போர்ச்சுகல் செல்வதற்கான பயண ஆவணம் வழங்க உதவியதாக ஏற்கெனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் லலித் மோடி குடும்பத்துக்குச் சொந்தமான இந்தோஃபில் ரசாயன நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கு சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுசலை நியமிக்க திட்டமிட்டிருந்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவரும், லலித் மோடியின் தந்தையுமான கே.கே.மோடி கூறுகையில், ஸ்வராஜ் கவுசலின் பெயரை எனது மகன் பரிந்துரைத்தது உண்மைதான். ஆனால் நிறுவனத்தின் வாரியம் அதனைப் பரிசீலிப்பதற்கு முன்பாகவே அந்தக் கோரிக்கையை லலித் மோடி திரும்பப் பெற்றுவிட்டார் என்றார்.
'அலைகள் ஓய்வதில்லை'தான்!