பா.ஜ.க.வை பாடாய்படுத்தும் 4 பெண்கள்........ சுஷ்மா, வசுந்தரா, ஸ்மிருதி, பங்கஜா
டெல்லி: பாரதிய ஜனதாவின் 'ஜாதகத்தில்' 'பெண்களால் பெரும் சேதாரம்' என எழுதப்பட்டுள்ளதோ என்று நினைக்கும் வகையில் அடுத்தடுத்து அக்கட்சியின் முக்கிய பெண் தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரராஜே, ஸ்மிருதி இரானி, பங்கஜா பாண்டே ஆகியோர் சர்ச்சைகளில் சிக்கி திணறி வருகின்றனர். இவர்களைக் காப்பாற்றுவதற்கு பாரதிய ஜனதாவும் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது முதல் ஒவ்வொருநாளும் சர்ச்சை சர்ச்சைகள்.. இதில் முதலாவது சர்ச்சையில் சிக்கியவர் ஸ்மிருதி இரானி.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. 10-ஆம் வகுப்பு கூட படிக்காத ஸ்மிருதி இரானியால் எப்படி கல்வியாளர்களை எதிர்கொள்ள முடியும்? என்றெல்லாம் கேட்கப்பட்டது.
ஸ்மிருதி இரானியின் கல்வி சர்ச்சை
இந்த பின்னணியில் ஸ்மிருதியின் படிப்பு என்ன என்பது குறித்த ஆராய்ச்சி தீவிரமானது.. அப்போதுதான் ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் ஒரு கல்வித் தகுதி, லோக்சபா தேர்தலில் மற்றொரு கல்வித் தகுதி, பேட்டிகளில் ஒரு கல்வித் தகுதி என ஸ்மிருதி இரானி மாறி மாறி கூறிவந்தது அம்பலமானது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கில் ஸ்மிருதி இரானிக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இருக்கிறது; வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனால் ஸ்மிருதி இரானி ராஜினாமா செய்தாக வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா மேலிடத்தில் 'செல்வாக்கு' இருப்பதால் தப்பித்துக் கொண்டிருக்கிறார்..
சுஷ்மாவின் ' மனித நேயம் '
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மூத்த பெண் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். மிக முக்கியமான வெளியுறவுத் துறையை தம் வசம் வைத்திருப்பவர்.. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான லண்டனில் தலைமறைவாக இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விசா பெற உதவியதாக சர்ச்சையில் சிக்கினார். அப்போது, மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவியதாக வாக்குமூலமும் கொடுத்தார் சுஷ்மா. இதுவே இவருக்கு பெரும் நெருக்கடியாகவும் இருந்து வருகிறது. இவரைக் காப்பாற்றுவதில் மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் தீவிரமாக இருக்கின்றன.
வசுந்தரராஜே சிந்தியா..
ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரராஜே சிந்தியாவும் லலித் மோடி விவகாரத்தில் சிக்கியவர்தான்.. ஆனால் சுஷ்மாவைப் போல ஆமாம் உதவி செய்தேன் என்று கூறாமல் மழுப்பிக் கொண்டிருக்கிறார்.. இவருக்கு முதலில் பாஜகவோ மத்திய அரசோ ஆதரவளிக்க முன்வரவில்லை. தற்போது இவரைக் காப்பாற்றுவதில் மத்திய அரசும் பாஜகவும் மும்முரமாக இருக்கிறது.
பங்கஜா பாண்டேவின் ஊழல்
பாஜகவின் சர்ச்சை பெண்கள் வரிசையில் இவரும் சிக்கி வருகிறார்.. அண்மையில், மகாராஷ்டிரா மக்கள் என்னை முதல்வராகவே நினைக்கிறார்கள் என கூறியிருந்தார். தற்போது பழங்குடி இன குழந்தைகள் நலத் திட்டத்துக்கான பொருட்கள் கொள்முதலில் ரூ206 கோடி ஊழல் செய்ததாக சிக்கியுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள்..
இவர்களை மீட்டு எப்படி கரைசேர்க்கப் போகிறதோ பாரதிய ஜனதா?