லலித்மோடி பிரச்சினைக்கெல்லாம் ஆர்.டி.ஐயில் பதில் கிடையாதுங்க.. வி.கே.சிங் அசால்ட் பதில்!
டெல்லி: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தில் சில தகவல்களை ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் கொடுக்காதது சரிதான் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆர்.டி.ஐயில் அனைத்து தகவல்களையும் தர முடியாது. சிலவகை தகவல்களுக்கு அந்த சட்டம் விதிவிலக்கு அளித்துள்ளது. இதையும் விமர்சனம் செய்வோர் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் விதிமுறைப்படி, அனைத்து தகவல்களையும் தர இயலவில்லை. மேலும் சில விவரங்கள் எங்கள் துறையிடம் இல்லாததால் தரவில்லை. ஆனால் இதை சில மீடியாக்கள், ஏதோ திட்டமிட்டு ஆர்.டி.ஐ விவரங்களை மறைப்பது போன்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
மேலும், பிரதமர் நரேந்திரமோடி இதுகுறித்து பதில் சொல்ல வேண்டும் என்று கேட்பது நியாயமில்லை. ஒரு டெலிவிஷன் சேனல் (மறைமுகமாக டைம்ஸ் நவ்) செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்புவதால் நாட்டின் பிரதமர் வந்து பதில் கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. எப்போது தேவையோ அப்போது மோடி பேசுவார்" என்றும் வி.கே.சிங் தெரிவித்தார்.
இந்திய முன்னாள் ராணுவ தளபதியான வி.கே.சிங் அமைச்சரானது முதல் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிவந்தார். இருப்பினும் ஏமனில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை சிறப்பான முறையில் தாயகம் அனுப்பி வைத்தார். அப்போது, அந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்காத ஊடகங்களை 'பிரெஸ்டிடியூட்' என்று அழைத்தார்.
பாஜக மேலிடம் மற்றும் மோடியின் நெருக்கடியால், அதன்பிறகு வாய்மூடி மவுனமாக இருந்த வி.கே.சிங் தற்போது வாய் திறந்துள்ளார்.