தீவன ஊழல் வழக்கில், தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு.. என்ன நடக்கிறது லாலு வழக்கில்?
கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கான தண்டனை அறிவிப்பை இன்று மீண்டும் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தண்டனை விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்றும் தண்டனை விபர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1990-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பாட்னா ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பல நீதிமன்றங்களையும், கட்டங்களையும் தாண்டி இந்த வழக்கு, ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் 21 ஆண்டு கால விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, லல்லு சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்ததாக தகவல் வந்தது. இதனையடுத்து, 16 பேருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படாமல் நாளை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.