2 மகன்கள் அமைச்சர்கள்.. மகள் ராஜ்யசபா எம்.பி.. இதுக்கு மேல ஒரு அப்பாவுக்கு என்ன வேணும்!
பாட்னா: லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியில் இல்லாவிட்டாலும் கூட எல்லாவற்றிலும் திருப்திகரமாக வலம் வருகிறார். அவரது இரு மகன்களையும் மாநில அமைச்சர்களாக்கி விட்டார். இதோ இப்போது தனது மகள் மிசாவை ராஜ்யசபா எம்.பியாக்குகிறார் லாலு.
அவரது ராஷ்ரிடிய ஜனதாதளம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானிக்கும் ராஜ்யசபா டிக்கெட் கொடுத்துள்ளார் லாலு. ஏற்கனவே லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் பீகாரில், நிதீஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளனர்.
தற்போது தனது மகள் மிசா பாரதியை ராஜ்யசபாவுக்கு அனுப்புகிறார் லாலு. முதலில் தனது மனைவி ராப்ரி தேவிக்கு சீட் தரலாமா என்று யோசித்தாராம் லாலு. இருப்பினும் தற்போது 40 வயதான மகள் மிசாவை அவர் எம்.பியாக்குகிறார். ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் 2 பேரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும். அந்த இடத்திற்குத்தான் மிசாவும், ராம்ஜேத்மலானியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது லாலுவின் வழக்குகள் அனைத்தையும் ராம்ஜேத்மலானிதான் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நன்றிக் கடனுக்காக அவருக்கு எம்.பி. பதவியைக் கொடுத்துள்ளார் லாலு.
தேசிய அளவில் மிசாவைக் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தார் லாலு. இதற்காக கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாடலிபுத்திரா தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். அவரை வீழ்த்தியவர் பாஜகவின் ராம் கிருபால் யாதவ். தற்போது அவர் மத்திய அமைச்சராக உள்ளார். என்ன காமெடி என்றால் ராம் கிருபால் யாதவ், லாலு கட்சியைச் சேர்ந்தவர்தான். அவருக்குச் சீட் தராமல் மிசாவுக்குத் தர முடிவு செய்ததால் கடுப்பாகி பாஜகவுக்குத் தாவி சீட் பெற்று மிசாவை வீழ்த்தியவர் அவர்.
இந்த நிலையில் தற்போது ராஜ்யசபா வழியாக தனது மகளை டெல்லிக்கு அனுப்புகிறார் லாலு. இதன் மூலம் லாலு குடும்பம் மற்றும் கட்சிக்கு டெல்லியில் முகம் கிடைத்துள்ளது. இனி லாலு கட்சி விவகாரத்தை டெல்லியில் மிசாவே பார்த்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
லாலு பிரசாத் யாதவ் கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாமல் உள்ளது. இதனால்தான் தனது மனைவியை முதலில் அரசியலில் இறக்கினார். பின்னர் மகன்களை இறக்கினார். இப்போது மகளையும் கொண்டு வந்துள்ளார்.
லாலுவின் 2வது மகன் தேஜஸ்வி பீகார் துணை முதல்வராக இருக்கிறார். அவருக்கு வயது 26தான். அவரது அண்ணன் தேஜ் பிரதாப் யாதவ் மாநில சுகாதார அமைச்சராக இருக்கிறார். இருவரும் கடந்த நவம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வென்றவர்கள் ஆவர்.
லாலு செல்வாக்கால் அவர்கள் வென்றார்கள் என்றாலும் கூட தனது தம்பிகளுக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தார் மிசா பாரதி. அதுதான் அவர்களது வெற்றிக்கு பேருதவியாக இருந்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் லாலு கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபையில் தனிப் பெரும் கட்சியாகவும் அது உருவெடுத்தது. இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி பதவியேற்று செயல்பட்டு வருகிறது.
தற்போது பீகாரில் ஐந்து ராஜ்யசபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. அதில் லாலு கட்சி, நிதீஷ் குமார் கட்சி தலா 2 பதவிகளுக்கும், பாஜக ஒரு பதவிக்கும் போட்டியிடுகின்றன.