தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் பறக்கும் தலைவர்கள்... முதலிடத்தில் லாலு!
பாட்னா: லோக்சபா தேர்தலில் ஹெலிகாப்டரில் பறந்து அதிக பிரச்சாரம் செய்தவர்கள் குறித்த பட்டியலில் முதலிடத்தை பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பெற்றுள்ளார்.
காலத்திற்குத் தக்கவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் தலைவர்களின் போக்குவரத்து வாகனங்களும் மாறி வருகின்றன. ஆதி காலத்தில் கால்நடையாக பிரச்சாரம் செய்த தலைவர்கள் அப்படியே படிப்படியாக மாட்டுவண்டி, குதிரை வண்டி, ஜீப், கேரவன் என முன்னேறினர்.
அந்தவகையில் தற்போதைய லோக்சபா தேர்தலில் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பீகார் முதல்வர் லாலு அதிகதடவைகள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
விரைவில் இரட்டை சதம்...
லாலு கடந்த வியாழக்கிழமை வரை 103 முறை தேர்தல் பிரச்சாரத்திற்காக பறந்து விட்டாராம். இந்த விஷயத்தில் லோக்சபா தேர்தல் முடிவதற்குள் இவர் இரட்டை சதம் போட்டுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக நம்பிக்கையை தருகிறது...
இது தொடர்பாக லாலு கூறும்போது, ‘குறைந்த நேரத்தில் சென்று வர முடிகிறது. தொலைவில் உள்ள தொகுதிகளுக்கு கூட சீக்கிரத்திலேயே பிரசாரத்தை முடித்து விட்டு அடுத்த கட்ட வேலையை தொடங்க முடிகிறது. அதனால், ஹெலிகாப்டரில் செல்வதையே விரும்புகிறேன். இது எனக்கு மிகவும் உதவியாகவும் அதிக நம்பிக்கையையும் தருகிறது‘ எனத் தெரிவித்துள்ளார்.
2வது இடத்தில் துணைப்பிரதமர்...
லாலுவுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி உள்ளார். இவர் சுமார் 63 முறை ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.
3வது இடத்தில் நிதீஷ்குமார்...
இதுவரை 56 முறை ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரம் செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
அடுத்ததடுத்து பறந்தவர்கள்...
அதற்கடுத்தடுத்த இடங்களில் பாஜகவின் நந்த் கிஷோர் - 52 முறையும், பீகார் மாநில பாஜக தலைவர் மங்கல் பாண்டே - 32 முறையும், பாஜகவின் சி.பி. தாகூர் - 29 முறையும் ஹெலிகாப்டரில் பறந்துள்ளனர்.
மகன் 5 முறை மட்டுமே...
இந்தப் பட்டியலின்படி ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இதுவரை 5 முறை மட்டுமே ஹெலிகாப்டர் பிரசாரம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஹெலிகாப்டர் வாடகைக்கு...
தேர்தல் பிரச்சாரத்திற்கென பாஜக 3 ஹெலிகாப்டர்களையும், ஐக்கிய ஜனதா தளம் 2 ஹெலிகாப்டர்களையும் தேர்தல் முடியும் வரை வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுக்காகத் தான் ஹெலிகாப்டர் பயணம்....
லாலு 103 முறை ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது அவரது கடின உழைப்பையும், பிரசாரத்தின் தீவிரத்தையும் காட்டுகிறது. மாநிலத்தின் எந்த மூலைக்கும் சென்று பிரசாரம் செய்ய லாலு தயாராக இருப்பதால்தான், அவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார்' என விளக்கமளித்துள்ளார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் சந்தேஷ்வர் பிரசாத் சிங்.