பாஜகவுடன் கைகோர்த்து நிதிஷ் குமார் அரசியல் தற்கொலை... லாலு காட்டம்
பாஜகவுடன் கைகோர்த்ததன் மூலம் நிதிஷ் குமார் அரசியல் தற்கொலை செய்து கொண்டார் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பாட்னா: பாஜகவுடன் கைகோர்த்து நிதிஷ் குமார் அரசியல் தற்கொலை செய்து கொண்டார் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பாஜக செய்த சித்து விளையாட்டில் மயங்கிய நிதிஷ் குமார் லாலுவை கழட்டிவிட ராஜினாமா நாடகத்தை ஆடினார்.
ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் பாஜக ஆதரவுடன் முதல்ராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். மேலும், பாஜகவைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராகவும் பதவி ஏற்றார்.
இதுகுறித்து, லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் இன்று பேசும் போது, அரசியலில் என்னைவிட அனுபவம் பெற்றவர் நிதிஷ் குமார் என்று கருதி வந்தேன் என்றும், எனது கருத்து தற்போது தவறாகிவிட்டது என்றும் கூறினார்.
அவருக்காகத் தான் வருத்தப்படுவதாகக் கூறிய லாலு, பாஜகவுடன் கைகோர்த்து நிதிஷ் குமார் அரசியல் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியாக நிதிஷ் குமாரின் கதை முடிந்துவிட்டதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்றும் லாலு கூறினார்.