ரயில்வே துறையே தடம் புரண்டு போச்சு.. பட்ஜெட் குறித்து நக்கலடித்த லாலு!
பாட்னா: லாலு பிரசாத்துக்கு எப்பவுமே லொள்ளுதான். ரயில்வே பட்ஜெட் குறித்து அவரிடம் கருத்துக் கேட்டால் அவரது ஸ்டைலில், ரயில்வே துறையே தடம் புரண்டு போய்க் கிடக்கிறது என்று நக்கலடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதுகுறித்து லாலு பிரசாத் யாதவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
இதற்கு முன்னால் ரயில்வே அமைச்சரான லாலு பதிலளிக்கையில், ரயில்வே துறை தடம் புரண்டு போய் விட்டது. ரொம்ப சாதாரணமான பட்ஜெட். அதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. வெயிட்டே இல்லை என்றார் லாலு.
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய பாஜக ஆட்சியில் ரயில்வே துறை மொத்தமாக தடம்புரண்டு போய்க் கிடக்கிறது.. இந்தியாவின் உயிர் நாடியாக ரயில்வே துறை முன்பு இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ரயி்ல்கள் தடம் புரள்வது போல ரயில்வே துறையும் தடம் புரண்டு விட்டது.
இந்தியாவுக்கு புல்லட் ரயில்கள் தேவையில்லை. இந்தியாவுக்கு புல்லட் ரயில்களை திணிக்க முயல்கின்றன சில வெளிநாட்டு சக்திகள் என்றார் லாலு.