மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு 3.5 ஆண்டுகள் சிறை.. ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
கடந்த 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
மாட்டு தீவன ஊழல்
இதில் லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் மட்டும் அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
லாலு குற்றவாளி - தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம்.
மறு நாளுக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கில் 15 பேரின் தண்டனை விவரத்தை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் அரசு வழக்கறிஞர்கள் இருவர் மரணமடைந்ததால் அன்று வழங்கப்பட இருந்த தண்டனை விவரம் மறுநாளான 4ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று தண்டனை அறிவிப்பு
ஆனால் 4ஆம் தேதியும் தீர்ப்பு வழங்கப்படாமல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மூன்று முறை லாலுவின் தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
லாலுவுக்கு என்ன தண்டனை?
பிற்பகல் 2 மணிக்கு தீண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது மாலை 4 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மா 2400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை ராஞ்சி சிபிஐ நீதிமன்ற நீதிபதி 4 மணிக்கு வாசிக்க தொடங்கினார்.
லாவுக்கு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்
அதன்படி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பஹூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜாராமுக்கு தலா 3.5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லாலு பிரசாத் உட்பட சிறை தண்டனை விதிக்கப்பட்ட 8 குற்றவாளிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் லாலுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம்
இந்த தீவன ஊழல் வழக்கில் மற்றொரு குற்றவாளி ஜெகதீஷ் ஷர்மாவுக்கு 7 வருடம் சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஐ நீதிமன்ற தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என லாலுவின் மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.