லாலுபிரசாத் யாதவ் உடல்நிலை பாதிப்பு : டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை
கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் யாதவ் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் கொண்டு செல்லப்படுகிறார்.
ராஞ்சி : கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் அங்குள்ள ராஜேந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டபோதே லாலுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகே அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உயர்தர மேல்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால், லாலு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக மருத்துவமனையான எய்ம்ஸில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ராஜேந்திர மருத்துவக்கல்லூரியின் இயக்குநர் கூறுகையில், லாலுபிரசாத் யாதவ் ஏற்கனவே இருதயக் கோளாறு, நீரிழிவு நோய், மூல நோய், சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு நிச்சயம் மேல்சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.