லோக்சபா தேர்தல்: பீகாரில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க லாலு திட்டம்!!
பாட்னா: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போதைய தேர்தலில் 10 இடங்களை ஒதுக்க ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள்தான் தர முடியும் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறிவிட்டார். இதனால் அம்மாநிலத்தில் மெகா கூட்டணி அமையாமல் போனது. காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு இழப்பை சந்தித்தது.
அதற்கு முந்தைய 2004 தேர்தலில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது இக்கூட்டணிக்கு 29 தொகுதிகள் கிடைத்தன.
ஐக்கிய ஜனதா தளத்துடன் முயற்சி
தற்போது பாஜகவுடன் 17 ஆண்டுகால கூட்டணியை முறித்திருக்கும் ஐக்கிய ஜனதா தளம் காங்கிரஸ் அணியில் சேரக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் கோரிய இடங்களை ஒதுக்க ஐக்கிய ஜனதா தளம் முன்வரவில்லை எனத் தெரிகிறது.
லாலுவுடனேயே போகலாமே
இதனால் மீண்டும் லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. லாலு பிரசாத் யாதவும் இம்முறை ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க விரும்புவதால் காங்கிரஸுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க முன்வந்திருக்கிறாராம்.
4 கட்சி கூட்டணி
இதனால் ராஷ்டிரிய ஜனதா தளம், பாஸ்வானின் லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸுக்கு டபுள் மடங்கு
இப்பேச்சுவார்த்தைகளில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 10, பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 8, தேசியவாத காங்கிரஸுக்கு 1 தொகுதியை ஒதுக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது. கடந்த தேர்தலைப் போல 3, 4 தான் என கறாராக லாலு நிபந்தனை விதிக்காததால் காங்கிரஸும் இதை ஏற்றுக் கொண்டு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.