லாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா?
பீகார்: கடந்த கால தேர்தலை போன்று யாதவர்களின் ஆதரவு லாலு பிரசாத் யாதவுக்கு கிடைக்குமா என்பது பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.
அரசியலில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கென்று சமூகத்து வாக்குகள் கணிசமாக இருக்கும். ஒரு வேட்பாளர் வெற்றி தோல்வி அடைய இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு ஜாதி அரசியல் இந்தியாவில் வேரூன்றி காணப்படுகிறது.
அந்த வகையில் பீகார் என எடுத்துக் கொண்டால் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியானது யாதவ சமூகத்துக்கு வாக்கு வங்கியை நம்பியே இருந்து வருகிறது. பீகாரில் மொத்தம் 14 சதவீதம் யாதவர்கள் உள்ளனர்.
கலகலக்கும் பாமக.. அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்.. அமமுகவில் வந்து குவிகின்றனர்!
லாலுவுக்கு ஆதரவு சவால்
அவர்கள் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் லாலு பிரசாத்துக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் மக்களின் ஆதரவும் ஆர்ஜேடிக்கு முக்கியத்துவத்தை அளித்து வந்தனர். எனினும் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதே சமூகத்தில் இளைஞர்களின் ஆதரவை கணிசமாக பாஜக பெற்றிருந்தது, அச்சமூகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருந்த லாலு பிரசாத் யாதவுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
கள நிலவரம்
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் லாலுவுக்கு யாதவர்களின் வாக்குகள் சாதகமாக அமைந்திருக்குமா என்பது சந்தேகம் அளிக்கிறது. கள நிலவரம் குறித்து பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் ஆகியோர் போட்டியிடும் பேகுஸ்ராய் எம்பி தொகுதியில் யாதவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்கப்பட்டது.
முதல்வர்
அதற்கு அவர், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் பிரதமராக லாலு வர வேண்டுமா இல்லை முதல்வராக தேஜஸ்வி யாதவ் வர வேண்டுமா என்பதற்கானது அல்ல. இது முழுக்க முழுக்க டெல்லியை நிர்வகிப்பது யார் என்பதற்கானதாகும். யாதவ சமூகத்தினரில் பெரும்பாலானோர் டெல்லியை நிர்வகிப்பது யார் என்ற கண்ணோட்டத்திலேயே சிந்திக்கின்றனரே தவிர லாலுவுக்கு ஆதரவான மனநிலை யாரிடமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முழு அளவு
தொகுதி களம் குறித்து அந்த நபர் கூறியது என்னதான் அவரது சொந்த கருத்து என்றாலும் இது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு என்பதால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
பாடலிபுத்திரம்
பீகாரில் மகா கூட்டணியில் இணைந்து லாலுவின் ஆர்ஜேடி மொத்தம் 40 எம்பி தொகுதிகளில் 19 -இல் மட்டுமே போட்டியிடுகிறது. அந்த 19-இல் யாதவ சமூகத்தினர் 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் பிரபலமானவர்களான ஷரத் யாதவ் மேதேபுரத்திலும் லாலுவின் மகள் மிசாபாரதி பாடலிபுத்திரத்திலும் போட்டியிடுகின்றனர்.
ஆர்ஜேடி
எனினும் இவர்கள் இருவருக்கும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தினேஷ் சந்திர யாதவ் மற்றும் ராம் கிரிபால் யாதவ் ஆகியோர் கடும் போட்டியாக உள்ளனர் என்பது கண்கூடு. இதிலிருந்தே யாதவ மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது தெரிகிறது. மேலும் ஏற்கெனவே நடந்து முடிந்த உஜ்ஜியார்பூர் மற்றும் மதுபானியில் யாதவ சமூகம் அல்லாதவர்களுக்கு ஆர்ஜேடி வாய்ப்பு கொடுத்துள்ளது. இதுவும் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
23-இல் பார்ப்போம்
ஆனால் பாஜகவோ மேற்கொண்ட தொகுதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் நித்யானந்த ராய் மற்றும் அசோக் ராய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் யாதவர்கள். இதன் மூலம் யாதவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்தது தெள்ளத் தெளிவாகிறது. எனவே இது போன்று வேட்பாளர்கள் தேர்வு, கள நிலவரம், கடந்த தேர்தலில் பாஜக பெற்ற யாதவர்களின் கணிசமான ஆதரவு ஆகியவற்றை பார்க்கும் போது லாலுவுக்கு இந்த தேர்தலில் அச்சமூக மக்கள் ஆதரவை கொடுத்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ, யாதவர்கள் மத்தியில் லாலுவின் செல்வாக்கு சரிகிறதா அல்லது அப்படியே இருக்கிறதா என்பதை மே 23-ஆம் தேதி பொறுத்திருந்து பார்ப்போம்.