பீகாரில் "அதிமுக அரசுக்கு திமுக அதிரடி ஆதரவு"!
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலிக்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சி அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். ஜிதன்ராம் மஞ்சி நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் பரம வைரியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத யாதவ், அதிரடியாக ஐக்கிய ஜனதா தளம் அரசை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்று அறிவித்துள்ளார்.
பீகாரைப் பொறுத்தவரை நிதிஷின் ஐக்கிய ஜனதா தளமும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் தமிழகத்து திமுக- அதிமுகவாகத்தான் இருந்து வந்தன. மாறிய அரசியல் சூழலில் தற்போது அம்மாநில அதிமுகவும் திமுகவும் கை கோர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.