பீகார்: சட்டசபை தேர்தலில் லாலுவின் 2 மகன்கள் "குடும்ப தொகுதிகளில்" போட்டி!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 2 மகன்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி தொடங்கி நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இதில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் எஞ்சிய 41 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணியின் அனைத்து கட்சி வேட்பாளர் பட்டியலும் இன்று பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
இந்த சந்திப்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் சவுத்ரி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ராம்சந்தர் பூர்வே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேட்பாளர் பட்டியலில் வைஷாலி மாவட்டத்தின் 2 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், பிரதாப் யாதவ் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரஹ்கோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 1995,2000ஆம் ஆண்டுகளில் லாலுவும், 2005 பிப்ர்வரி, 2005 அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் ராப்ரி தேவியும் வெற்றி பெற்றிருந்தனர். இது லாலுவின் குடும்ப தொகுதியாக கருதப்படுகிறது.
லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தின் மகுவா தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார். அவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். இத்தொகுதியில் 2010ஆம் ஆண்டு ராப்ரி தேவியை தோற்கடித்தவர் சதீஷ் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.