சியாச்சினில் இருந்து மீட்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா மரணம்
டெல்லி: சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11.45 மணிக்கு மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 4 தமிழக வீரர்கள் உள்பட 10 பேர் சிக்கினர். அதில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா மட்டும் பனிச்சரிவு ஏற்பட்டு 6 நாட்கள் கழித்து 25 அடி ஆழ பனியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
கோமா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து ஹனுமந்தப்பா தொடர்ந்து கோமாவில் இருந்தார். அவரது நிலைமை இருக்க இருக்க மோசமாகிக் கொண்டே போனது.
சிடி ஸ்கேன்
ஹனுமந்தப்பாவுக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவரது மூளைக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இருந்தது தெரிய வந்தது. அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
நிமோனியா
அவரின் நுரையீரல்களில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் வேலை செய்யவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும்போதிலும் அவரின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருந்தது.
மரணம்
ஹனுமந்தப்பாவின் நிலைமை இன்று காலை மேலும் மோசனமானது. இந்நிலையில் காலை 11.45 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மனைவி
ஹனுமந்தப்பா கோமாவில் இருப்பதை பார்த்த அவரது மனைவி மகாதேவி தனது கணவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார். கடவுளே, உனக்கு ஏதாவது உயிரை எடுக்க வேண்டும் என்றால், என் உயிரை எடுத்துக் கொள். என் கணவர் உயிர் பிழைத்து நாட்டிற்கு சேவை செய்யட்டும். அவர் உயிர் பிழைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்.