மலை முழுங்கி நில ஆக்கிரமிப்பு.. பதவியை விட்டு ஓடிய அமைச்சர்.. இங்கல்ல கேரளத்தில்!
நில ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் போக்குரவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மாநிலத்தில் குட்டநாடு தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாமஸ் சாண்டி. அவர் பினராயி விஜயன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
ஆலப்பழா மாவட்ட ஆட்சியர் அனுபமா கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில் மார்தாண்டம் ஏரியில் உள்ள பெரும்பாலான இடத்தை சொகுசு விடுதி கட்டுவதற்காக அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.
அதில் அந்த இடத்துக்கு அருகில் இருந்த விளை நிலத்தை சொகுசு விடுதிக்கு வரும் வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்துவதற்காக சமன் செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அமைச்சருக்கு நோட்டீஸும் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் தாமஸ் சாண்டி வழக்கு தொடர்ந்தார். அப்போது அரசின் புகாரை எதிர்த்து ஒரு அமைச்சரே வழக்கு தொடர்வது குற்றம் என்றும் அரசின் புகாரை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதே சரி என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சிகள் அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தாமஸை காப்பதாக முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றம்சாட்டி அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இன்று சாலை அமைச்சரவை கூடியது. இதை தொடர்ந்து தாமஸ் சாண்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்தார்.