தண்டவாளத்திற்காக நிலத்தை அளித்த 2 விவசாயிகளுக்கு பதிலுக்கு கிடைக்கும் 'ரயில்'
சிம்லா: இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரின் நிலங்கள் ரயில்வே தண்டவாளம் அமைக்க வாங்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நிலத்திற்கு பதிலாக டெல்லியில் இருந்து உனா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை அளிக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளான மேலா ராம் மற்றும் மதன் லால். தண்டவாளம் அமைக்க அவர்களின் நிலங்களை மத்திய ரயில்வே துறை கடந்த 1998ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்காக ரயில்வே துறை ராமுக்கு ரூ.8.91 லட்சமும், லாலுக்கு ரூ.26.53 லட்சமும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ரயில்வே துறை நிலத்தை எடுத்துக் கொண்டதற்கு பணம் அளிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் கூடுதல் தொகை கேட்டு நீதிமன்றத்தை நாடினர். 2009ம் ஆண்டு ரயில்வே துறையும் நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால் 2011ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றமோ விவசாயிகள் இருவருக்கும் இழப்பீட்டு தொகையை கூடுதலாக வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரயில்வே துறைக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் ரயில்வே துறை 2013ம் ஆண்டில் தான் இமாச்சல பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விவசாயிகள் இருவருக்கும் சேர வேண்டிய தொகையை 6 வாரங்களுக்குள் வங்கி கணக்கில் செலுத்துமாறு உத்தரவிட்டது. ரயில்வே துறை நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் உள்ளூர் நீதிமன்றத்தை நாடினர். இழப்பீடு வழங்காததால் இமாச்சல் எக்பிரஸ், ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட நான்கு ரயில்களில் ஏதாவது ஒன்றை தங்களுக்கு அளிக்குமாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அவர்களின் மனுவை விசாரித்த நீதிபதி முகேஷ் பன்சால் ராம் மற்றும் லாலுக்கு இழப்பீடாக டெல்லியில் இருந்து உனா வரும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
ரயில்வே துறை மட்டும் அந்த 2 பேருக்கும் ரூ.35 லட்சம் வழங்காவிட்டால் வரும் 16ம் தேதி காலை உனா வரும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவிடும்.