ரூ.40 கோடி நிலம்.. ஹேமமாலினிக்கு வெறும் ரூ.70,000க்கு தாரை வார்த்த மகா. பாஜக அரசு
மும்பை: 40 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை பாஜகவை சேர்ந்த நடிகை ஹேமமாலினிக்கு, ரூ.70 ஆயிரத்திற்கு மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் கனவுக் கன்னியான நடிகை ஹேமமாலினி பாஜக எம்.பியாகவும் பதவி வகிக்கிறார். இவர், கிளாசிக்கல் நடன பள்ளி அமைக்க முடிவு செய்து, அதற்காக நிலம் கேட்டு, மகாராஷ்டிர அரசிடம் 20 வருடங்கள் முன்பு விண்ணப்பம் அளித்திருந்தார்.
இதையடுத்து, 1997ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பால் தாக்ரே, மும்பை அந்தேரி பகுதியில் 1,741 சதுர மீட்டர் பரப்பிலான நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வழங்கினார். ஆனால், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் சார்ந்த பிரச்சினை காரணமாக, ஹேமமாலினியால் அங்கு, நடன பள்ளியை துவக்க முடியவில்லை.
சதுர மீட்டர் ரூ.35
இந்நிலையில், தற்போதைய மகாராஷ்டிர பாஜக அரசு, அந்தேரி, ஒசிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புள்ள நிலத்தை, சதுர மீட்டருக்கு வெறும் ரூ.35 என்ற விலையில், மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கு ஹேமமாலினிக்காக ஒதுக்கியுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.40 கோடியாம்
நிலம் திரும்பவில்லை
இந்த தகவலை, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கலகலி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "பால் தாக்ரே காலத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தில், பள்ளி தொடங்க முடியாது என்று தெரிந்த பிறகும், இதுவரை ஹேமமாலினி அந்த நிலத்தை திருப்பி தரவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நிதி எங்கே
கலகலி மேலும் கூறுகையில், "நடன பள்ளி ஆரம்பிக்க தேவைப்படும் மூலதனத்தில் 25 சதவீத நிதி இருப்புக்கான ஆதாரத்தை முதலில் அரசாங்கத்திடம் அளிக்க வேண்டும். எஞ்சிய 75 சதவீத நிதியை எப்படி திரட்டப்போகிறார் என்பதற்கான ஆவணங்களையும் வழங்க வேண்டும். சுமார் ரூ.18 கோடி செலவில் நடன பள்ளி தொடங்க உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஹேமமாலினி, இதுவரை நிதி ஆதாரம் குறித்த விவரத்தை அரசிடம் அளிக்கவில்லை" என்றார்.
காங்கிரஸ் காலத்திலும்
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் ராஜிவ் சுக்லாவுக்கு, அந்தேரி மேற்கு பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாஜக-சிவசேனை எதிர்ப்பால் அந்த நிலத்தை அவர் திருப்பி கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.