மங்களூர் அருகே கடல் வெள்ளரிகளுடன் 16 இலங்கை மீனவர்கள் கைது ... படகு பறிமுதல்
மங்களூர்: ரூ. 72 லட்சம் மதிப்புள்ள கடல் வெள்ளரிகளுடன் இலங்கைப் படகு ஒன்றை மங்களூர் அருகே கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக படகஸில் இருந்த 16 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 16 பேரும் இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேராபானி பகுதியில இவர்களை கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். இது லட்சத்தீவுக்கு அருகே உள்ளது. மங்களூரிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் இந்த பவளப் பாறைப் பகுதி உள்ளது.
இதுகுறித்து கர்நாடகத்திற்கான கடலோரக் காவல் படை தலைவர் ராஜாமணி சர்மா கூறுகையில், கொழும்பு மரைன் என்று பெயரிடப்பட்ட படகை நாங்கள் பறிமுதல் செய்தள்ளோம். இவர்கள் இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். மேலும் 2 டன் கடல் வெள்ளரிகளையும் சட்டவிரோதமாக பிடித்துள்ளனர். இது மிகவும் கடுமையான குற்றமாகும்.
இவர்களை ஏப்ரல் 6ம் தேதி ஐஎன்எஸ் ராஜ்தூத் கப்பல் கண்டுபிடித்துத் தகவல் கூறியது. இதையடுத்து இவர்கள் பிடிக்கப்பட்டனர்.
பெரிய படகு மூலம் அப்பகுதிக்குப் போனால் பவளப் பாறைகள் சேதமடையும் என்பதால் செயின்ட் ஆண்டனி என்ற ஒரு மீன்பிடி படகு மூலம் சென்று இவர்களைக் கைது செய்தோம்.
பறிமுதல் செய்யப்பட்ட படகில் ஏர் கம்பர்சர்கள், 2 ஜிபிஎஸ் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், 37.5 கிலோ எடை கொண்ட 16 காஸ் சிலிண்டர்கள் ஆகியவையும் இருந்தன.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்கள் இங்கு முகாமிட்டு சட்டவிரோதமாக இதைச் செய்து வந்துள்ளனர்.