26/11 பாணியில் மீண்டும் மும்பையை தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டம்: உளவுத் துறை எச்சரிக்கை
மும்பை: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தலைவர் ஜகி உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் உள்ள சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 மாதங்களுக்குள் மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை முடிக்காவிட்டால் லக்வியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடுத்த மூன்று மாதங்களில் மும்பையில் உள்ள ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்கக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த 8 முதல் 10 தீவிரவாதிகள் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 26/11 தாக்குதல் பாணியில் கொடூரமாக தாக்கக்கூடும் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையை தாக்க திட்டமிட்டுள்ள தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து உள்ளூர்காரர்கள் உதவியுடன் செயல்பட உள்ளார்களாம்.