முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இழுக்கப் பார்த்த லஷ்கர்.. ராகுல் சொன்னது உண்மையானது!
டெல்லி: உ.பி. மாநிலம் முசாபர்நகரில் நடந்த மதக் கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை தனது அமைப்பில் சேர்த்து தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முசாபர்நகர் கலவரம் வெடித்த சில நாட்களுக்குப் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூட இதே போன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை பாகிஸதானின் ஐஎஸ்ஐ அமைப்பு தொடர்பு கொண்டிருப்பதாகவும், அவர்களைத் தவறான பாதையில் திருப்ப பாகிஸ்தான் முயல்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து பாஜக விமர்சனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு, முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை இழுத்து தன் பக்கம் சேர்க்க முயன்றாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உத்தரப் பிரதேசத்தின் மத ரீதியிலான முக்கியமான பகுதிகளில் ஊடுறுவவும் லஷ்கர் முயல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமையன்று ஹரியானாவைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமிய மத குருக்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்தான் லஷ்கர் அமைப்பின் முசாபர்நகர் திட்டம் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் லஷ்கர் அமைப்புக்காக முசாபர்நகருக்குப் போய் வந்ததாகவும், அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிலரை சந்தித்ததாகவும் கூறியுள்ளனர். இதற்காக லஷ்கர் அமைப்பிடமிருந்து இவர்கள் பணம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் முசாபர்நகரிலிருந்து திரட்டப்படும் நபர்களை வைத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் தங்களைச் சந்தித்து தங்கள் பக்கம் திருப்பப் பார்த்ததாக முசாப்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர் போலீஸாரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். நிவாரண முகாம்களுக்கு வந்து தங்களை இந்த நபர்கள் சந்தித்ததாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த லஷ்கர் நபர்களுக்கு தாங்கள் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், இதனால் அவர்கள் டெல்லி திரும்பிச் சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு மதகுருக்களின் பெயர்கள் ஹபீஸ் ரஷீதி மற்றும் ஷாஹித் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பலமுறை, முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண முகாம்களுக்கு விஜயம் செய்திருப்பதாகவும் டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இருவரையும் ஹரியானா மாநிலம் மேவாத்தில் வைத்து டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியில் தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக இவர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த இரு மத குருக்களாலும் அணுகப்பட்ட நபர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அப்பாவிகள் மனதில் பிரிவினைவாதத்தைத் தூண்ட துடிக்கும் லஷ்கருக்கு எதிரான வலுவான வழக்காக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய புதிய திருப்புமுனை மூலம் ராகுல் காந்தி அன்று சொன்னது உண்மை என்று தற்போது நிரூபணமாகியுள்ளது. ராகுல் அன்று அப்படிச் சொன்னபோது பாஜகவினர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தனர். முசாபர்நகர் கலவரத்தை அரசியலாக்க முயல்கிறார் ராகுல் காந்தி என்று விமர்சித்தனர். பல முஸ்லீம் அமை்பபுகளும் கூட ராகுல் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.