இந்திய பாதுகாப்பு துறை விஞ்ஞானிகள் மாநாட்டில் தாக்குதல் நடத்தவும் சதி: 2-ம் நாளாக ஹெட்லி வாக்குமூலம்
மும்பை: மும்பையில் 2007-ம் ஆண்டு நவம்பர் மாதமே தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் மாநாடுதான் தங்களது தாக்குதல் இலக்காக இருந்ததாகவும் 2-வது நாளாக பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிக கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில் 166 பேர் பலியாகினர். 309 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். பின்னர் நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து கசாப் தூக்கிலிடப்பட்டான்.
ஹெட்லி
இந்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஹெட்லி, அந்நாட்டில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஒப்புதல் வாக்குமூலம்
மும்பை தாக்குதல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஹெட்லி கடந்த டிசம்பர் மாதம் தாம், அப்ரூவர் ஆக விரும்புவதாக மும்பை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அமெரிக்கா சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் டேவிட் ஹெட்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறார்.
2-வது நாளாக...
இன்று 2-வது நாளாகவும் ஹெட்லி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்றைய வாக்குமூலத்தில் ஹெட்லி தெரிவித்ததாவது:
மேஜர் இக்பால்
மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்தது சஜித் மிர், மேஜர் இக்பால். இவர்களுடன் இ மெயில் மூலமாக தொடர்புகளை வைத்திருந்தேன். இவர்களில் மேஜர் இக்பால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யைச் சேர்ந்தவர். அவர்தான் இந்திய ராணுவத்துக்குள் என்னை ஊடுருவ உத்தரவிட்டார். மேலும் எப்படி உளவு பார்ப்பது என பயிற்சி கொடுத்ததும் மேஜர் இக்பால்தான்.
மேஜர் பாஷா
அதேபோல் அல் கொய்தாவில் இணைந்த ஐஎஸ்ஐ-ன் அப்துர் ஹகிம் என்ற மேஜர் பாஷாவும் இந்த தாக்குதலில் தொடர்புடையவர். இந்தியாவின் முக்கிய இடங்களை உளவு பார்க்க எனக்கு உத்தரவிட்டது மேஜர் பாஷாதான். குறிப்பாக இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்த தனி ராணுவத்தையே வைத்திருந்தார் அவர்.
விஞ்ஞானிகள் மாநாடு
2007-ம் ஆண்டு நவம்பர் மாதமே மும்பையில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. மும்பை ஹோட்டல் தாஜ்-ல் நடந்த இந்திய பாதுகாப்புதுறை விஞ்ஞானிகள் மாநாட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முதலில் சதித் திட்டம் தீட்டப்பட்டது.
லக்வி, மசூத் அசார்...
பாகிஸ்தானின் முஸாபர்பாத் நகரில் மும்பை தாக்குதலுக்கு மூளையான லக்வியை முதன் முதலில் சந்தித்தேன். அங்குதான் மவுலானா மசூத் அசாரையும் நான் சந்தித்தேன். 2006-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சதித் திட்டங்களுக்காக இந்தியாவுக்குள் நான் அனுப்பி வைக்கப்பட்டேன். லக்விதான் இந்த சதித் திட்டத்துக்கு தலைவராக இருந்தார்.
இவ்வாறு 2-வது நாள் வாக்குமூலத்தில் ஹெட்லி தெரிவித்துள்ளார்.