நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது... அது என்ன தெரியுமா?
நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 4 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட உள்ளது.
டெல்லி: நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சேனாபடி மாவட்டத்தில் உள்ள லீசாங் கிராமம் தான் கடைசியாக மின்சார இணைப்பு பெற்ற கிராமம்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதற்காக, தீன்தயாள் உபாத்யாய் கிராம் ஜோதி யோஜனா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இதுவரை மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் நடந்தன.
2015 ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, 1000 நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அப்போது, 18,452 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த கணக்கெடுப்பின்போது, மேலும், 1,275 கிராமங்களுக்கும் மின்சார வசதி இல்லை என்பது தெரியவந்தது. அதையடுத்து இந்த கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் துவங்கின.
கடைசியாக மணிப்பூர் மாநிலத்தின் சேனாபடி மாவட்டத்தில் உள்ள லீசாங் கிராமத்துக்கு நேற்று மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தில் பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும், 10 சதவீத வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டால், அது மின்சார வசதி பெற்ற கிராமமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 2019ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 4 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டும்.
கடைசியாக மின்சார இணைப்பு பெற்ற லீசாங் கிராமத்தில் மொத்தம் 19 குடும்பங்களே வசிக்கின்றன. 31 ஆண்கள், 34 பெண்கள் என அந்த கிராமத்தில் 65 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.