கோச்சடையான் பட விவகாரம்... விசாரணையை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பணத்தை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
டெல்லி: விளம்பர நிறுவனத்துக்கு பணத்தை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்தின் நிறுவனம் , ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ. 10 கோடி கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.6.20 கோடியை லதா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் மீதம் ரூ. 80 லட்சம் மட்டுமே பாக்கி இருப்பதாக லதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனமோ ரூ.6 கோடி நிலுவை இருப்பதாக கூறுகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக லதா உறுதியளித்திருந்தார். இதற்கு 12 வாரம் காலஅவகாசமும் கொடுக்கப்பட்டது. இதை மீறினால் பெங்களூருவில் ஆட் பியூரோ நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கில் லதா ரஜினிகாந்த் விசாரணையை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த அவகாசம் ஜூலை 10 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இன்று இந்த வழக்கு ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப் ஐ ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பெங்களூரு நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இவ்விவகாரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.