இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் இன்று மாலை 6.59 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இன்று பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் ஏவப்படுகிறது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த செயற்கைக்கோள் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்படுகிறது.
இஸ்ரோ திட்டமிட்டபடி ஏற்கனவே, 7 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இதனை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6.59 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 29 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படுகிறது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறுகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளுக்கான உதிரி பாகங்கள், அமைப்பு முறைகளை பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 70 பொறியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.
பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை அசம்பிள் செய்தனர். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்க தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.