யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உ.பி-யில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு.. மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா: உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து, வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் சிக்கி அம்மாநிலத்தில் 1,100 பேர் பலியாகியுள்ளதாக மம்தா கூறியுள்ளார்
கடந்த 17ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் ஏற்பட்ட நிலத்தகராறில் 10 பழங்குடியின மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி, சாலையில் அமர்ந்து தர்ணா தனது தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கலவரம் வெடித்தால் பாஜக-வினர் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேச சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.
எனவே உத்தரப்பிரதேசத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக உண்மை கண்டறியும் குழு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களை அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர் என சாடியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறேதும் இல்லை என்றும் மம்தா கூறியுள்ளார்.