வியாபம் ஊழல் எல்லாம் ‘சில்லி மேட்டர்’: சொல்வது சதானந்த கவுடா
உதய்பூர்: வியாபம் மோசடி வழக்கு எல்லாம் சாதாரண விஷயம். இதற்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டியது இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சதானந்த கவுடாவிடம் ‘வியாபம்' முறைகேடு பற்றி கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இந்த பிரச்னை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்து விட்டனர்.
நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. இது மிகவும் சாதாரண விஷயம். ஒவ்வொரு சாதாரண விஷயத்துக்கும் பிரதமர் பதில் அளிக்க வேண்டியதில்லை. ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர்தான் இது மாதிரியான பிரச்சினைகளுக்கு பதில் அளிப்பார்கள் என்று சதானந்த கவுடா கூறினார்.
நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்றால் அதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம். ஆனால் இது (நுழைவுத்தேர்வு ஊழல்) சாதாரண பிரச்சினையாகும். அதேபோல லலித்மோடி விவகாரத்திலும் பிரதமர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சதானந்தா கவுடா கூறியுள்ளார்.