தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல்! மாணவர்கள் மகிழ்ச்சி
டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்க அளிக்க சட்ட வரைவு கொண்டு வந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயார் என்று பாசிட்டிவ் பதில் தமிழக அரசுக்கு வந்தது. இதற்கான யோசனையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு வருட விலக்கு கொண்டு வரும் வகையில், அவசர சட்ட முன்வடிவை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை செய்தது. அதை பரிசீலனை செய்த வேணுகோபால் அந்த சட்ட முன்வடிக்கு ஒப்புதல் வழங்கலாம் என இசைவு தெரிவித்துள்ளார். இதையேற்ற மத்திய சட்ட அமைச்சகம், நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு கொண்டுவரும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து சட்ட முன்வடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கின. இதனால் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமலுக்கு வரும். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.