20 தமிழர் படுகொலை போலி என்கவுண்ட்டரே: ஆந்திரா ஹைகோர்ட்டில் வழக்கு
ஹைதராபாத்: திருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான்.. இதற்கு காரணமான ஆந்திரா அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழர்கள், செம்மரங்களை வெட்டியதாக கூறி ஈவிரக்கமின்றி ஆந்திரா போலீசார் நேற்று சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா மாநில உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாத் என்பவர் இன்று ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில், திருப்பதி சேசாலம் வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டது போலி என்கவுண்ட்டர்தான்.. அதில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.. படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் போது உரிய நடைமுறைகளை போலீசார் கடைபிடிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் ஆந்திரா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இம்மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெற உள்ளது.