இந்த கொடுமையை பாருங்க.. கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமிக்காக ஆஜராகும் பெண் வக்கீலுக்கு தொடர் மிரட்டல்
காஷ்மீர் சிறுமி கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தில் ஆஜராகும் பெண் வக்கீலுக்கு தொடர் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
Recommended Video
ஜம்மு: காஷ்மீர் சிறுமி கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக ஆஜராகும் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜ்வாத் சக வக்கீல்களின் தொடர் மிரட்டலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வலதுசாரி அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்காக ஆஜாராகி வாதாடி வரும் வக்கீல் தீபிகா சிங் ராஜ்வத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளியில் இருந்து மட்டுமல்லாது நீதிமன்ற வளாகத்தில் சக வக்கீல்களாலும் தான் மிரட்டலுக்கு ஆளாவதாகவும், ஜம்மு காஷ்மீர் பார் கவுன்சில் தலைவர் பூபேந்தர் சிங் சலாத்தியா இந்த வழக்கில் ஆஜராகாமல் இருக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியிடம், நீதிமன்றத்தில் ஆஜராகும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை இல்லை எனவும், நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் முறையான விசாரணை நடந்து வருவதாகவும் தீபிகா சிங் ராஜ்வத் கூறியுள்ளார்.