கேரளாவில் 2 பேரை பலிவாங்கிய தங்கக் கடத்தல்– வழக்கறிஞர் மகன் உள்பட 3 பேர் கைது
திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் கடத்தல் தங்கத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காததால் 2 வாலிபர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஹாசிம் , தலச்சேரியைச் சேர்ந்த நசீர் ஆகிய 2 பேர் துபாயில் இருந்து கேரளாவுக்கு 3 கிலோ கடத்தல் தங்கத்தை மறைத்து கொண்டு வந்துள்ளனர்.
இந்த தங்கத்தை காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல வக்கீலின் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு கடத்தல்காரர்கள் கொடுத்த பணி. ஆனால், தங்கத்துடன் மங்களாபுரம் வந்த அந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
தங்கத்துடன் 2 பேரும் தலைமறைவானதால் ஆத்திரம் அடைந்த வக்கீலின் மகன் உள்பட 3 பேர் கும்பல் சேர்ந்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொன்று காசர்கோடு பகுதியில் காட்டுக்குள் புதைத்து விட்டனர்.
இதுபற்றி போலீசார் தீவிரவிசாரணை நடத்தி காசர்கோட்டைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் மகன் முனாகத் , அவரது கூட்டாளிகள் முகமது இஷ்சாத், முகமதுகான் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கத்தை ஒப்படைக்காமல் ஏமாற்றியதால் கூலிப்படையை ஏவி அவர்கள் 2 பேரையும் தீர்த்து கட்டியதையும் மங்களாபுரம் பகுதியில் ஒரு ரப்பர் தோட்டத்தில் பிணத்தை புதைத்ததையும் அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முனாகத் மற்றும் அவரது கூட்டாளிகள் இதுவரை எத்தனை தங்க கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார், யார் என்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.