ஷூவில் ஸ்பை கேமரா வைத்து பெண்களின் 'அந்த' பகுதியை போட்டோ எடுத்த வக்கீல்
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள மால் ஒன்றில் காலணியில் ஸ்பை கேமராவை பொருத்தி பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் உள்ள நுகர்வோர் மன்றத்தின் முன்னாள் தலைவரின் மகன் வழக்கறிஞராக உள்ளார். 34 வயதாகும் அவர் தெற்கு டெல்லியில் உள்ள பிரபல மால் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு கடைக்குள் சென்று பெண்கள் அருகே தனது வலது காலை வைத்துள்ளார்.
அவரின் நடவடிக்கை மீது கடை மேனேஜருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கேட்டதற்கு அங்கிருந்து தப்பியோட பார்த்துள்ளார். பின்னர் அவரை பாதுகாவலர்கள் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் வழக்கறிஞரின் வலது காலணியில் ஸ்பை கேமரா இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து அவர் வைத்திருந்த கேமராவை பறிமுதல் செய்தனர். அதில் 12 ஆபாச புகைப்படங்கள் இருந்தன. அதை அவர் இணையதளங்கள் எதிலாவது வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.
பிரபல இணையதளங்களில் இருந்து இந்த ஐடியாவை பெற்று ஆன்லைனில் கேமரா வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,
அந்த நபர் தனது வலது காலணியில் கேமராவை பொருத்தியுள்ளார். அவர் பெண்கள் அருகே நின்று அவர்களின் மர்ம உறுப்பை புகைப்படம் எடுத்துள்ளார். அவர் முன்னதாக சனிக்கிழமையும் மாலுக்கு சென்றுள்ளார். அவரின் லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.