தெலுங்கானா எதிர்ப்பு- சீமாந்திரா வழக்கறிஞர்கள் ஜன. 23 வரை கோர்ட் புறக்கணிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராகவும் ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தியும் சீமாந்திரா வழக்கறிஞர்கள் ஜனவரி 23ந் தேதி வரை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சீமாந்திரா வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு முப்பால சுப்பாராவ் கூறியுள்ளதாவது:
ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி தீவிரமாகப் போராடவுள்ளோம். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
வரும் ஜனவரி 23ந் தேதி வரை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கிறோம். எங்களது கோரிக்கைக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு அறிவிக்கும் வரை இந்தப் போராட்டம் நீடிக்கும்.
தற்போது 18 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் 13 மாவட்டங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. ஆந்திரத்தைப் பிரிக்கும் விவகாரத்தால் மாநில அரசு கடந்த 144 நாள்களாக கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் பெறுவோம். எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் நடத்தவுள்ளோம் என்றார்.