வெளியே அனுப்பப்பட்ட அனில் கோஸ்வாமி- புதிய உள்துறை செயலராக எல்.சி. கோயல் நியமனம்!
டெல்லி: நாட்டின் புதிய உள்துறை செயலாளராக ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த எல்.சி. கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த அனில் கோஸ்வாமி நேற்று இரவு நீக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு எல்.சி. கோயலை அந்த இடத்துக்கு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மதாங் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. கைது செய்வதை உள்துறை செயலாளராக இருந்த அனில் கோஸ்வாமி தடுத்தார் என்பது புகார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணை நடத்தினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை செயலர் பொறுப்பிலிருந்து, அனில் கோஸ்வாமி நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஊரக வளர்ச்சித் துறையில் செயலராக இருந்த எல்.சி. கோயல் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1979ம் ஆண்டு கேரளா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோயல். 2002ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராகவும் பணியாற்றியவர் கோயல்.