படிப்பை கைவிட மறுத்த மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற பேராசிரியர்
பெங்களூர்: தன்னை விட அதிகமாக மனைவி படித்திருக்கிறாள் என்ற தாழ்வுமனப்பான்மையின் காரணமாக மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசவேஷ்வரா நகரில் வசித்து வரும் 32 வயது சந்தோஷ் குமார், கல்லூரி விரிவுரையாளாராக பணி புரிந்து வருபவர். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் ப்ரீத்தா (28) என்ற கல்லூரி மாணவியுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னர் தனது மேற்படிப்பைத் தொடர விரும்பியுள்ளார் ப்ரீத்தா. ஆனால், இது சந்தோஷிற்கு உடன்பாடில்லை. ஏற்கனவே, திருமணத்தின் போது உறவினர்கள் பி.இ படித்த தன்னை விட தன் மனைவி அதிகமாக படித்திருப்பதாக கேவலமாக பேசிய மனவருத்தத்தில் இருந்துள்ளார் சந்தோஷ்.
இந்நிலையில், தனது எம்.டெக் படிப்பைத் தொடர நினைத்த ப்ரீத்தாவை ஆத்திரத்தில் கடப்பாரையால் தாக்கியுள்ளார் சந்தோஷ். இதில், தலையில் பலத்த அடி பட்டு மயங்கி விழுந்துள்ளார் ப்ரீத்தா. மனைவி இறந்து விட்டார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து தப்பி வெளியே சென்று விட்டார் சந்தோஷ்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ப்ரீத்தாவை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக ப்ரீத்தா மரணமடைந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ப்ரீத்தாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், சந்தோஷிற்கு சொத்து வாங்குவதற்காக பணத்தேவை ஏற்பட்டதாகவும், அதற்காக ப்ரீத்தா வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதில் சந்தோஷிற்கு உடன்பாடில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ப்ரீத்தாவின் மேற்படிப்பைத் தொடர சந்தோஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் ப்ரீத்தாவின் சகோதரர் கூறியுள்ளார்.