லீ குவான் யூ மறைவு: இந்தியாவில் மார்ச் 29ல் தேசிய துக்கதினம்
டெல்லி: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் 29ஆம் தேதியை தேசிய துக்க தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 1959 முதல் 1990 வரை 31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் லீ குவான் யூ. சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று போற்றப்படும் லீ கடந்த 23ஆம் தேதி தனது 91ஆம் வயதில் உயிரிழந்தார்.
லீ குவான் யூ மரணத்தையொட்டி சிங்கப்பூரில் நாடு முழுவதும் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள லீயின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரும் 29ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
லீ குவான் யூவின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒருநாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக்கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.
அரசு தொடர்பான எவ்விதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும் அன்றைய தினம் நடைபெறாது என மத்திய அரசு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.