வரலாற்றில் முதல் முறையாக மேற்குவங்கத்தில் துடைத்தெறியப்படும் இடது சாரிகள்.. இதுதான் காரணமா?
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரிகள் படுதோல்வியடையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாட்டின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் அன்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. கருத்துகக்கணிப்புகள் அனைத்தும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் மத்தியில் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது.
இது பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் நிச்சயம் இந்த கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் பாஜகவை மட்டும் மத்தியில் ஆளவிடக்கூடாது என்பதிலும் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க!
இடதுசாரிகள் தோல்வி
இதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே கோட்டில் பயணிக்கின்றன. இந்நிலையில் பெரும் கலவரத்திற்கு பின் வாக்குப்பதிவு நடந்து முடிந்த மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் படுதோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சியாக கூட இல்லை
இது இடது சாரி தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேற்குவங்கத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தது இடது முன்னணி. ஆனால் இன்று எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட வழியில்லாமல் போராடி வருகிறது.
கட்சி தாவல்
தேர்தலுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு தாவி விடுவார்கள் என கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 42 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
திரிபுராவில் சரிவு
கடந்த தேர்தலில் இடது முன்னணி மொத்தமாக 10 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கேரளாவில் இருந்து 6 இடங்களையும் மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் இருந்து தலா 2 இடங்களையும் பெற்றது. திரிபுராவிலும் இடதுசாரிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. அம்மாநிலத்தில் 25 ஆண்டுகள் முதல்வராக இருந்து மாணிக் சர்கார் தோல்வியடைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 59 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி வெறும் 16 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.
தலைவர்கள் இல்லை
இந்நிலையில் இடது சாரிகளின் இந்த தோல்விக்கு கட்சியில் சரியான தலைவர்கள் இல்லை என்பதே காரணம் என கூறப்படுகிறது. கட்சியில் சரியான நிர்வாகிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஹன்னன் மொல்லா, கட்சியின் பழைய சித்தாந்தங்களை கட்சித் தலைமை கைவிட வேண்டும் என கூறியுள்ளார். கட்சியின் சலிப்பூட்டும் கருத்தியலே கட்சியை நிராகரிக்க காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
பழைய சித்தாந்தம்
கட்சியின் பழைய சித்தாந்தமே பல நிர்வாகிகள் விலகளுக்கு காரணம் என்றும், தாங்கள் அடுத்த தலைமுறைக்கு புதிய சித்தாந்ததை புதுப்பிக்க தவறிவிட்டதாகவும் ஹன்னன் மொல்லா கூறியுள்ளார். இதனாலேயே கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் படு பதாளத்துக்கு சென்று விட்டதாகவும் ஹன்னன் மொல்லா கூறியுள்ளார்.