அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்த மோடி சர்க்கார்: இடதுசாரிகள் சாடல்!!
டெல்லி: அமெரிக்காவிடம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரணடைந்துவிட்டதாக இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.
அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுபயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.
கடந்த 25- ந்தேதி ஒபாமாவுக்கு - நரேந்திர மோடிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இருந்து வந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இன்று தனது 3 நாள் சுற்றுபயணைத்தை முடித்து கொண்ட ஒபாமா செளதி அரேபியா புறபட்டு சென்றார்.
ஒபாமாவின் வருகை குறித்தும், இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்தும் இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அணுசக்தி விபத்து பொறுப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்டு உள்ள உடன்பாடு அமெரிக்காவின் நலன்களுக்காக சரணடைவதையே இது வெளிப்படையாக காட்டுகிறது.
2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், இந்திய மக்களைப் பாதுகாக்கவும், இழப்பீடு வழங்கவும், அணு விபத்து வழக்கில் நிவாரணம் வழங்கவும் வகை செய்கிறது.
இதனால் இந்த உடன்படிக்கை அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு அடிபணிவதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பியான டி. ராஜா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடுக்கு டி.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.