பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக கூறி, ஹைதராபாத்தில் இடதுசாரி எழுத்தாளர் கைது!
Recommended Video
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம்சாட்டி, எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான வரவர ராவ் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஹைதராபாத்திலுள்ள வரவர ராவ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தெலுங்கானா போலீசார் உதவியுடன் புனேயிலிருந்து வந்திருந்த போலீசார் சோதனைகளை நடத்தினர்.
மூத்த பத்திரிக்கையாளர் குர்மநாத், புகைப்படக்காரர் கிராந்தி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குர்மநாத், வரவர ராவின் மருமகன் ஆகும். அவர்கள் வீடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே வழக்கு எதுவும் அவர்கள் மீது பதியப்படவில்லை.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் ஆர் என்ற எழுத்து இடம் பெற்றிருந்தது. ராஜீவ் காந்தி பாணியில், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும் என்பது இந்த சங்கேத மொழியின் குறியீடு என்று போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்த கடிதத்தில் வரவர ராவ் பெயர் இடம் பெற்றிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றார்கள். வீரசம் என்ற பெயரில், புரட்சிகர எழுத்தாளர் அமைப்பு ஒன்றையும் வரவர ராவ் நடத்தி வருகிறார்.
இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வரவர ராவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், பீமா கோரேகான் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவருமே ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர்கள் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் இன்று திடீரென வரவர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாம்பளி கிரிமினல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், புனே அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.