கேரளாவில் ராமாயண கொண்டாட்டம்..தெலுங்கானாவில் காளி பூஜை... எங்கே செல்லும் 'இடதுசாரி'கள் பாதை?
தெலுங்கானாவில் சீதாராம் யெச்சூரி காளி பூஜை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரசித்திபெற்ற போனாலு காளி பூஜையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்று பூச்சட்டி தூக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளாவில் பாஜகவின் விஸ்வரூபத்தைத் தடுக்கும் வகையில் இடதுசாரிகளும் காங்கிரஸும் ராமாயண மாதம் கொண்டாடப் போவதாக அறிவித்தன. இது பெரும் விவாதப் பொருளானது.
கேரளா மார்க்சிஸ்ட் கட்சி இதை மறுத்தது. ஆனால் இடதுசாரி சிந்தனையாளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள சமஸ்கிருத சங்தான் இந்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் பிரசித்திபெற்ற போனாலு காளி பூஜையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த ஞாயிறன்று பங்கேற்றிருக்கிறார். அத்துடன் காளிக்கு பூஜை செய்வதற்கான பூச்சட்டியையும் தூக்கி வரும் படங்களும் வெளியாகி உள்ளன.
தலித் இயக்கத் தலைவர்களான பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் உருவாக்கிய பகுஜன் இடது முன்னணியின் மாநாட்டில் பங்கேற்க சீதாராம் யெச்சூரி ஹைதராபாத் வருகை தந்திருந்தார். அந்த மாநாட்டு திடலிலேயே போனாலு திருவிழா, காளிபூஜை என அட்டகாசமாக இந்துத்துவா இயக்கங்களைப் போல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அம்பேத்கர், மார்க்ஸ் தத்துவங்களைப் பேசுகிற இடதுசாரிகள் இப்படி வாக்கு வங்கி அரசியலுக்காக 'இந்துத்துவா'வாதிகளாக அவதாரம் எடுப்பதா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி.
எங்கே செல்லும் இடதுசாரிகள் பாதை?