மே.வங்கம்: திரிணாமுல் வசம் இருந்த 165 கட்சி அலுவலகங்களை பாஜக உதவியுடன் மீட்ட இடதுசாரிகள்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகாலமாக திரிணாமுல் காங்கிரஸார் கைப்பற்றி வைத்திருந்த தங்களது 165 கட்சி அலுவலகங்களை தற்போது பாஜக ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்க தேர்தல் என்பது வன்முறை கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது. தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக வருகிறதோ அந்த கட்சிகள், எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களைத் தாக்கி கைப்பற்றி தங்களது கட்சி கொடிகளை ஏற்றுவது வழக்கம்.
பின்னர் தங்களுக்கு வெற்றி வரும் போது இழந்த கட்சி அலுவலகங்களை மீட்டுக் கொள்வது நடைமுறை. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸிடம் தங்களது கட்சி அலுவலகங்களை பறிகொடுத்திருந்தன இடதுசார்ரி கட்சிகள்.
தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் பாஜக உதவுடன் இழந்த 165 கட்சி அலுவலகங்களை இடதுசாரிகள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கட்சி அலுவலகங்களை புதுப்பித்து செங்கொடி ஏற்றி வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை இல்லாது ஒழிக்க வேண்டும் என்பதில் பாஜகவும் இடதுசாரிகளும் படுதீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.