பெங்களூர் பள்ளியில் பிடிபட்ட சிறுத்தை விலங்கியல் பூங்காவில் இருந்து தப்பியது
பெங்களூர்: பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் இருந்து தப்பியோடிவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள மாரதஹள்ளியில் இருக்கும் விப்ஜியார் பள்ளியில் கடந்த 7ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் வந்து 12 மணிநேரம் போராடி சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தையை பிடிக்கையில் 3 பேர் காயம் அடைந்தனர்.
பிடிக்கப்பட்ட சிறுத்தை தெற்கு பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் விடப்பட்டது.
சிறுத்தை
விலங்கியல் பூங்காவில் அந்த சிறுத்தை கூண்டு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒரு கண்ணில் குளுக்கோமா இருப்பதாலும், பல் ஒன்று உடைந்ததாலும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தப்பியோட்டம்
உணவு அளிக்க கூண்டை திறந்தபோது சரியாக பூட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று கூண்டில் இருந்து வெளியேறியது.
எங்கே?
கூண்டில் இருந்து வெளியேறிய சிறுத்தை விலங்கியல் பூங்கா வளாகத்தில் தான் எங்கோ உள்ளது என்று வனத்துறையினர் கூறினர். ஆனால் 50 பேர் 6 குழுக்களாக பிரிந்து பூங்கா முழுவதும் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை.
விலங்கியல் பூங்கா
கூண்டில் இருந்து தப்பிய சிறுத்தை அருகே 500 ஏக்கரில் உள்ள மற்றொரு விலங்கியல் பூங்காவிற்கு சென்றிருக்கலாம் என்று வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா
சிறுத்தை தப்பியோடியது குறித்து அறிந்து விலங்கியல் பூங்கா அருகே வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வனத்துறையினரிடம் விளக்கம் கேட்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.