மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டம்... முதலீட்டு நகையை வட்டியுடன் தங்கமாக கேட்கிறது திருப்பதி கோயில்
திருப்பதி: மத்திய அரசின் தங்க நகை டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் நகைகளை, முதிர்வின் போது வட்டி மதிப்புடன் தங்கமாகவே பெற இருப்பதாகத் தெரிவித்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் மீதான மோகம் அதிகமாகவே உள்ளது. இதனால் பெருமளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ஆபரணங்களாக வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 20 ஆயிரம் டன் தங்கத்தை வெளியில் கொண்டு வரவும் தங்க டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல், தங்க நாணய திட்டம் மற்றும் தங்க பத்திர திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்கம் டெபாசிட்...
இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி கோயில்களும் தங்களிடம் உள்ள தங்க நகையை டெபாசிட் செய்யலாம். அதன்படி, மும்பை சித்தி விநாயகா கோயில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற பிரபல கோயில்களும் இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்கின்றன.
தங்கமாகவே...
தங்க டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் காலம் முடிந்த பிறகு முதிர்வு பலனை பணமாக அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால், டெபாசிட் செய்யும்போதே இது குறித்து தெரிவிக்க வேண்டும். எனவே, தங்க நகை டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் நகைகளை வட்டி மதிப்புடன் தங்கமாகவே பெற இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்...
இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இயக்குநர் டி.சாம்பசிவராவ் கூறுகையில், ‘இந்த திட்டத்தில் டெபாசிட் செய்த நகைகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு தொகையை பணமாக அல்லாமல் தங்கமாகவே திருப்பித்தர கேட்டிருக்கிறோம்.
மாற்றம் தேவை...
அதோடு நடுத்தர மற்றும் நீண்ட கால டெபாசிட்டுகளில் முதலீடு மற்றும் வட்டியை தங்கமாக வழங்க கோரியும், இதற்கு ஏற்ப இந்த திட்டத்தில் உள்ள சில விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். இத்திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள், மேலும் பல கோயில்களும் முதலீடு செய்வதற்கு தூண்டும் வகையில் கவர்ச்சிகரமானதாக அமையும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்...
கடந்த மாதம் இத்திட்டத்தில் 1.3 டன் தங்கம் 1.75 சதவீத வட்டி விகிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்யப்பட்டது. மேலும் 1.4 டன் தங்கத்தை ஓரிரு வாரங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மும்பை சித்தி விநாயக் கோயில்...
இதேபோல், மும்பை சித்திவிநாயக் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நரேந்திர முராரி ரானே தங்களது டெபாசிட் பற்றி கூறுகையில், ‘‘கோயிலின் 44 கிலோ தங்கம் இந்த மாத இறுதியில் குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்ய உள்ளோம். தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே வருவதால் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால்தான் முதிர்வுடன் சேர்த்து தங்கமாகவே வழங்க கோருகிறோம்'' என்றார்.